சரும பாதுகாப்புக்கு தேங்காய்!
நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ள தேங்காய் உதவுகிறது. தலை முதல் பாதம் வரை மென்மை,பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் தேங்காய்.
* வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும்.
* வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன்,கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.
சரும பாதுகாப்பு
தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை. சரும நலனை பாதுகாப்பதில் விலைகுறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும்.
தலையை பாதுகாக்கும்
தலைக்கு ரசாயனம் கலந்த கண்ட எண்ணெயை பூசுவதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதனால் தலையின் தோல் பகுதியை வறண்டு விடாமல் தேங்காய் எண்ணெய் பாதுகாக்கும். மேலும், குளிப்பதற்கு முன்பும் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் பூசிக் கொண்டு ஊறவிட்டுக் குளிக்கலாம்.
கூந்தல் பாதுகாப்பு
கூந்தலை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய்க்கு நிகர் எதுவுமில்லை. சுத்தமான தேங்காய் எண்ணெயை புரதச் சத்து காணப்படுகிறது. இந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் ஊறவைத்து குளிப்பதன் மூலம் கூந்தலின் வேர்க்கால்கள் பலமடையும், பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் கிடைக்கும்.
மன அழுத்தம் நீக்கும்
பணிச்சூழல் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. இதனால் முகமானது களை இழந்து காணப்படும். தேங்காய் எண்ணெய் மன அழுத்தம் நீக்கி முகத்தை பொலிவாக்குகிறது. தேங்காய் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வலிகள் நீங்கும்.
தோல் நோய்கள் நீக்கும்
தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு மட்டுல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது. ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது. இதனால் தோல்களில், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவது நீங்குகிறது.
அதிகமாக மேக்-அப் போடும் பெண்கள், இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்
No comments
உங்கள் கருத்துக்கள்: